சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்ட செயல்பாட்டு அறிக்கை இன்று (ஆக. 25) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதிற்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
திட்டம் செயல்பட்டுவரும் பகுதிகள்
முதல்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் பிற கிராம, நகர்ப்புறப் பகுதிகளில் மக்களை சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை
இத்திட்டம் தொடங்கப்பட்டு இன்றுவரை (ஆக. 25)
- உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 89ஆயிரத்து, 070 நபர்களுக்கும்
- நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 57ஆயிரத்து, 497 நபர்களுக்கும்
- உயர் ரத்த அழுத்த, நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 39 ஆயிரத்து 484 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும், 6,102 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 6,232 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 30 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தினால் மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 415 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அங்கன்வாடியில் சத்துணவு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு'